கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசும் பொருளாகவும் வரவேற்பு பெற்ற கரப்பான் பூச்சி இயக்கத்தினர் தற்போது மதுரை பேரணி நடத்தி வேலை வாய்ப்பு கேட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சியை போல என ஒப்பிட்டு கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த கருத்து நாடு முழுவதிலும் இருக்கும் வேலையில்லாமல் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து “காக்ரோச் ஜனதா பார்ட்டி” என்ற நையாண்டி பக்கத்தை சமூக வலைதளக்கத்தில் தொடங்கி 4 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பின் தொடர்பவர்களைப் பெற்றது. இதனால் அந்த சமூக வலைதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியது.
இந்நிலையில் மதுரையில் காக்ரோச் ஜனதா பார்டிக்காக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும், இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை காந்தி மியூசியத்தில் துவங்கி தமுக்கம் மைதானம் வரை பேரணியாக சென்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி மத்திய அரசிடம் வேலை கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்கள், இந்திய இளைஞர்கள் நாட்டில் நடைபெறும் ஊழல், வேலை வாய்ப்பின்மை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு தருகிறோம் என்று கூறிய பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு எதிராகத்தான் இளைஞர்கள் இணையதளத்தில் ஒன்றிணைந்திருககிறார்கள் வேலையை மோடி அரசு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியே நாங்கள் இன்று பேரணியாக செல்கிறோம், அதேபோல இளைஞர்களுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தும் ஏற்புடையது அல்ல எனக் கூறினார்.
