இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.
மிருகயா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கடந்த 1976-ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின்போது நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இளைஞர்கள் தங்களது இலக்கை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது என்றும், எப்போதும் கனவு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.