இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என்று காமன்வெல்த் கூட்டமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் விளையாட்டுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. நவ., 26ம் தேதி கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் நகரங்களின் பட்டியலில் ஆமதாபாத்தும் இணைய உள்ளது.
ஆமதாபாத்தில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன. 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல் நடந்த மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்;
‘இந்தியாவிற்கு இது மிகவும் பெருமைக்குரிய நாள். 2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆமதாபாத்தில் நடத்தும் இந்தியாவின் முயற்சியை காமன்வெல்த் சங்கம் அங்கீகரித்ததற்கு, இந்தியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலக விளையாட்டு வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்ய பிரதமர் மோடி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கு இது ஒரு மகத்தான அங்கீகாரமாகும். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், திறமையான வீரர்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம், பிரதமர் இந்தியாவை ஒரு சர்வதேச விளையாட்டு தளமாக மாற்றியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.