வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி

Estimated read time 0 min read

தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

வந்தே மாதரம் பாடலில் உள்ள சிறப்பை பற்றி அனைவரும் பேசினார்கள். மக்கள் பிரச்னைகளை பேச கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வந்தே மாதர விவாதம் மிக முக்கியமென இரு அவைகளிலும் மத்திய அரசு நடத்துகிறது. ஆனால், தற்போது மாநிலங்களவையில் அவை முன்னவர் இல்லை, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இல்லை. மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மட்டுமே உள்ளார். பொறுப்புணர்ச்சி என்பது விவாதத்தை கொண்டு வருவதில் மட்டுமல்ல, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் உள்ளது. வந்தே மாதரத்தை பற்றி விவாதிக்க சொன்னால் அவர்கள் நேரு மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

வந்தே மாதரமும், ஜன கன மன தேசிய கீதமும் வங்காள மொழியில் இருந்தாலும் காஷ்மீர் முதல் குமரி வரை பரவியது. யாரும் எந்த மொழி எனப் பார்க்கவில்லை. எல்லோருக்கும் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. தமிழகத்தில் நேதாஜி பெயரில் சாலை வைத்துள்ளோம். கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனை என்று காந்தியின் மனைவி பெயரில் மருத்துவமனை வைத்துள்ளோம். கமலா நேரு பூங்கா என்று நேருவின் மனைவியின் பெயரில் பூங்கா வைத்துள்ளோம். வட இந்தியாவில் வ.உ.சிதம்பரனார் சாலை உண்டா?, பாரதியார் தெரு உண்டா?, யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மன்னை பற்றி தெரியுமா? ஏன் புறக்கணிக்கப்பட்டோம்?

வெள்ளையனே வெளியேறு என்று முதன்முதலில் எதிர்த்துப் போராடியவர் பூலித்தேவன். பின்னர், கட்டபொம்மன். இவர்களை வட இந்தியர்கள் அறிவார்களா? இலங்கை பகுதியை மீட்டெடுத்த வேலுநாச்சியாரை தெரியுமா? பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. பற்றி பிரதமர் பேசும்போது கூறுகிறார். ஆனால் அவருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? ரஷ்ய அதிபருக்கு குடியரசுத் தலைவர் விருந்தளிக்கும் போது, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் அழைக்கப்படவில்லை. வெள்ளையர்களை வணிகத்தில் தோற்கடிக்க வ.உ.சி. சுதேசி கப்பலை வாங்கினார். அதனை வந்தே பாரதம் என்றழைத்தார். அவருக்கு இரு ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் செக்கு இழுக்க வைத்தனர் எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author