நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், திரைத்துறையில் தனக்கு ஏற்படும் தடைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “சினிமாவில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மக்கள் என்னை கதாநாயகனாக உயர்த்தினார்கள்.
எனது நண்பன் அருண்ராஜா காமராஜை இயக்குநராக்கவே தயாரிப்புத் துறையில் இறங்கினேன். வணிக நோக்கத்தைத் தாண்டி, சினிமா எனக்குக் கொடுத்த வாழ்விற்குத் திரும்ப ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கோடே படங்களைத் தயாரித்து வருகிறேன்,” என்றார்.
சமகாலப் போட்டி குறித்துப் பேசிய அவர், “நான் யாருக்கும் போட்டியாளனாகவோ, யாரையும் தாண்டிச் செல்லவோ அல்லது யாரையும் காலி செய்யவோ இங்கு வரவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை இப்படியே சுதந்திரமாக விட்டுவிடுங்கள். எனக்கும் வாழ்வில் பல இறக்கங்கள் இருக்கின்றன,” என உருக்கமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திரைத்துறையில் தனக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் குறித்துச் சாடினார். “நான் கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன்; ரீமேக் படங்களில் நடிப்பதில்லை. அதனால் வெற்றியோ, தோல்வியோ அதில் என் பங்கு இருக்கிறது.”
மேலும்”எப்போதும் எனக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள். ஆனால், திரைத்துறையில் இருக்கும் சிலரே எனக்குத் தடையாக இருக்கின்றனர். அந்தத் தடைகளை அவர்கள் நீக்கினால், இன்னும் நான்கு சிவகுமார் முருகேசன்களை (புதிய இயக்குநர்களை) என்னால் உருவாக்க முடியும் என்றார்.
