தமிழகத்தில் நிலவி வரும் பால் உற்பத்தி பாதிப்பு காரணமாக, தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தி பெருமளவு சரிவைக் கண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைச் சமாளிக்க, தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ நிறுவனத்திடம் இருந்து பால் கொள்முதல் செய்து விநியோகித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பால் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களைத் தக்கவைக்க கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.14 வரை உயர்த்தியுள்ளன. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்தைச் ஈடுகட்ட, விற்பனை விலையை உடனடியாக உயர்த்தியுள்ளன.
தமிழகத்தின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, மற்ற தனியார் நிறுவனங்களும் விலையேற்றத்தை அமல்படுத்தியுள்ளன. அதன்படி
செறிவூட்டப்பட்ட பால்: ரூ.76 ஆக உயர்ந்த நிலையில் தற்போது ரூ.78 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைப்போன்று
டீ ஸ்பெஷல் பால்: ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆக, நிலைப்படுத்தப்பட்ட பால்: ரூ.66-ல் இருந்து ரூ.68 ஆக சமன்படுத்தப்பட்ட பால்: ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆக இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்: ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், ஒரு கிலோ தயிர் விலையிலும் ரூ.2 உயர்ந்துள்ளது.
“கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே உற்பத்தி குறைந்துள்ளதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியைப் பெருக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
