அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளார்.
அதில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத வேலைவாய்ப்புகளைத் தமிழக மக்களுக்கே வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், கோயில்களில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், திருச்சி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை விடுவித்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் மூட வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது வேல்முருகனின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
அத்துடன், தமிழகத்தில் அதிகரித்து வரும் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த ‘பர்மிட்’ முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும், படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுடன் இந்த மக்கள் நலக் கோரிக்கைகளையும் முன்வைத்து வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
