வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

Estimated read time 1 min read

வணிக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மே 7ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, சிபிஐ(எம்எல்) கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்.) லிபரேசன், கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசு வணிக சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. கடந்த 120 நாட்களில் 1,518 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ந் தேதியன்று 1,739 ரூபாயாக இருந்த ஒரு சிலிண்டரின் விலை தற்போது 3,257 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதேபோன்று புலம்பெயர் தொழிலாளர்களும், தெருவோர வியாபாரிகளும், சிறு குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 261 உயர்த்தியுள்ளார்கள். இதற்கு சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை. கடந்த நான்காண்டுகளாக பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலைகளை ஒருபோதும் குறைக்கவில்லை. இந்நிலையில் தற்போது வணிக சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது அப்பட்டமான கொள்ளையாகும். பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி, வரிக்குறைப்பு, ஊக்கத் திட்டங்கள் என்று வாரி வழங்கும் பாஜக அரசாங்கம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது சுமை ஏற்றுவதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் சூறையாடுகிறது என்பதற்கு உதாரணமாக இது இருக்கிறது.

மேலும், 2026 ஏப்ரல் 24ந் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள ரயில்வே துறையின் சுற்றறிக்கையின் படி ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்களில் ஆண்டுக்கு 2 சதவிகிதத்தை குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 28 ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் இப்படி குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 29 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை குறைப்பதற்கு இந்த சுற்றறிக்கை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக ரயில்வேயில் 1906 பணியிடங்களை இந்த ஆண்டில் குறைக்க வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது. ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.

எனவே, அநியாயமான, நியாயமற்ற வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், ரயில்வேயில் உத்தேசிக்கப்பட்டுள்ள 29 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிட வெட்டுக்களை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் மே 7, 2026 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நாசகரமான இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமெனவும், இந்த கண்டன இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author