அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘
ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் ராணுவத் தாக்குதல்களை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் மிகத் தீவிரப்படுத்தப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடற்படை கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தமது இலக்கு என்றும், அந்த நாட்டை “கற்காலத்திற்கு” கொண்டு செல்லப் போவதாகவும் அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். டிரம்பின் இந்த அதிரடிப் போக்கினால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதோடு, உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் பாலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய ராணுவமும் அமெரிக்காவிற்கு “தகுந்த பதிலடி” கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த போர் பதற்றம் உலக நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.
