மேற்கு ஆசியாவில் கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போர் சூழல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதற்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது ‘ஹார்முஸ் நீரிணை’ மீதே உள்ளது. பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் இந்த முக்கியமான கடல்வழிப் பாதையை ஈரான் முடக்கியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் இப்பாதை முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருள் விலை சர்வதேச சந்தையில் விண்ணைத் தொட்டுள்ளது. இது உலக பங்குச்சந்தைகளிலும் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனை ‘போருக்கான தூண்டுதல்’ என வர்ணித்துள்ள அதிபர் ட்ரம்ப், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (ஏப்ரல் 7) இந்த முற்றுகை நீக்கப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு நேரடி மிரட்டல் விடுத்துள்ள ட்ரம்ப், “ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரான் ‘நரக வேதனையை’ அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஈரானுக்கு வரும் செவ்வாய்க்கிழமை ‘பவர் பிளாண்ட் டே’ (Power Plant Day) மற்றும் ‘பிரிட்ஜ் டே’ (Bridge Day) ஆக அமையும். அன்று ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். ஏற்கனவே மார்ச் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 7 இரவு 8 மணி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த ஆக்ரோஷமான கருத்துக்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அவரது ஆதரவாளரான குடியரசுக் கட்சித் தலைவர் மார்ஜோரி டெய்லர் கிரீனும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ட்ரம்ப் பைத்தியமாகிவிட்டார், இதனை அவரது நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்” என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப்பின் எச்சரிக்கையை ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், “அமெரிக்கா எங்களது பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தாக்கினால், அமெரிக்காவின் ஒவ்வொரு குடும்பமும் நரகத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார்.
மேலும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு கிடைக்கும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும், கப்பல்களுக்குப் புதிய கடல்வழி வரி விதிக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
