ஈரான் உடனான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ரூ. 2,222 கோடி மதிப்புள்ள அதிநவீன கண்காணிப்பு டிரோன் விபத்துக்குள்ளாகி அழிந்ததாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், இம்மாதம் 9-ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே சர்வதேச வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் ‘MQ-4C டிரைட்டன்’ (MQ-4C Triton) ரக ட்ரோன் திடீரென மாயமானது. சுமார் 50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன், அடுத்த சில நிமிடங்களில் 10,000 அடிக்குக் கீழே இறங்கி ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது.
இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 238 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,222 கோடி) ஆகும். இது குறித்து அமெரிக்க கடற்படை தரப்பில் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த டிரோன் விபத்துக்குள்ளானது. இதன் மீது ஈரான் தரப்பிலிருந்து எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே இந்த போரில் மூன்று ‘F-35’ போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ள நிலையில், இந்த ட்ரோன் வீழ்ச்சி அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இரு நாடுகளும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்திருந்தன. ஆனால், நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாகப் பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஈரானின் முக்கியப் பொருளாதாரப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முழுமையாக முற்றுகையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனால் பாரசீக வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ளன.
