மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு, அங்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகத் தங்களது தேர்தல் வாக்குறுதியான ‘Detect, Delete and Deport’ (கண்டறிந்து, நீக்கி, நாடு கடத்து) என்ற அதிரடிக் கொள்கையை மிகத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த அதிரடி உத்தரவின் மூலம் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவர்களின் பெயர்களைப் போலி ஆவணங்களில் இருந்து நீக்கி, சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசின் இந்த அதிரடி கிடுக்கிப்பிடியால் மேற்கு வங்கத்தில் தங்கியிருந்த ஊடுருவல்காரர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் ஏராளமான வங்கதேசத்தினர், தங்களைக் கைது செய்து நாடு கடத்துவார்கள் என்ற அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர். இதனால் இந்திய-வங்கதேச எல்லையிலுள்ள ஹகிம்பூர் சோதனைச்சாவடியில் ஆயிரக்கணக்கான வங்கதேச மக்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஒரே நேரத்தில் திரண்டதால் எல்லையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
