கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.) துணைத் தலைவரும், கல்வியாளர் மற்றும் சமூகநல ஆர்வலருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமி சனிக்கிழமை காலமானார்.
டாக்டர் தவமணி தேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமியின் துணைவியார் ஆவார்.
தமிழ் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவராக விளங்கிய அவர், எளிமை, மனிதநேயம் மற்றும் அன்பான அணுகுமுறையால் அனைவரின் மரியாதையையும் பெற்றிருந்தார்.
பெண்கள் மத்தியில் உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சமூகநல முயற்சிகளில் அவர் தீவிர அக்கறை காட்டி வந்தார். பெண்களின் உடல்நலம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
டாக்டர் தவமணி தேவியின் மறைவுக்கு மருத்துவர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
