தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தற்போது செயல்பாட்டில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் சண்முகம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சி (தவெக ஆட்சி) 3 மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் போய்க்கொண்டிருக்கிறது” என விமர்சித்திருந்தார்.
இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ள சண்முகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு வெறும் மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் அப்படிச் சொன்னாலும் அது மிகப்பெரிய தவறு என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக-விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது குறித்துப் பேசிய சண்முகம், அந்த அரசுக்குத் பெரும்பான்மை இல்லாத காரணத்தாலேயே தவெக-விற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம் என்று ஓப்பனாக உடைத்துள்ளார். இந்தியா கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தொடர்வதாகவும், அதில் திமுக-வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் “நாங்கள் யாருடைய ஒப்புதலையும் (பர்மிஷன்) கேட்டுவிட்டு ஒருவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை” என்று சண்முகம் கறாராகக் கூறியுள்ளது, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
