சென்னையில் உள்ள 4 கடற்கரைகளில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். குறிப்பாக சென்னைகள் பல்வேறு பகுதிகளில் 1,524 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை முழுவதும் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை உள்படபல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள நான்கு கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் வைத்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கும் பணியை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 1,220 சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலை முதலே விநாயகர் சிலைகளை பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கரைத்து வருகின்றனர்.
இங்கு சிறிய சிலைகள், நடுத்தர அளவிலான சிலை மற்றும் ராட்சத சிலைகள் என மூன்று வகைகளாக விநாயகர் சிலைகள் பிரிக்கப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. சிலைகள் கரைக்கப்பட்டு வருவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.