திமுக – காங்கிரஸ் கூட்டணியில் “ஆட்சியில் பங்கு” மற்றும் “கூடுதல் தொகுதிகள்” என்ற விவகாரம் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பது அவர்களது உரிமைதான்; அதில் தப்பில்லை. ஆனால், கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பப்படலாம், அது ஒருபோதும் நடக்காது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
மேலும் பேசிய அவர், “வருகிற தேர்தலில் திமுக தான் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இப்போது ஆட்சியிலும் பங்கு கேட்பது என்பது ‘இல்லாத ஊருக்கு வழி தேடுவது’ போல் உள்ளது” என்று நக்கல் தொனியில் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி டெல்லி தலைமைக்கு அனுப்பிய ரகசிய கடிதம் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைகோவின் இந்த “இல்லாத ஊருக்கு வழி” என்கிற கமெண்ட் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
