திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தங்க மயில் வாகனச் சேவை கோலாகலமாகத் தொடங்கியது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேர், வெள்ளித் தேர் மற்றும் யானை, குதிரை, பூத வாகனங்களில் சுவாமி வீதியுலா வருவது வழக்கம்.
இந்நிலையில், தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் பாஸ்கர் தலைமையிலான நிர்வாகிகள், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க மயில் வாகனத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கினர்.
இந்த வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான அரசு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, முறையாக தங்க மயில் வாகன சேவை தொடங்கியது.
அப்போது, வள்ளி, தெய்வானையுடன் கூடிய உற்சவர் முருகப்பெருமான், மின்னொளியில் ஜொலித்த தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது.
