மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
எனினும், அவரை வரவேற்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.
அதேபோன்று, பிதான் நகர் பகுதியில் நடைபெற இருந்த மாநாடு கொசாய்பூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக திட்டங்களை செய்துள்ளதாகவும், ஆனால், இப்பகுதியில் வளர்ச்சி உங்களை வந்தடைந்ததா? என்பது தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார்.
இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என தெரிவித்துள்ளார். மேலும், பழங்குடியினத்தில் இருந்து வந்த குடியரசு தலைவர் வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாகவும், குடியரசு தலைவர் அலுவலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அதன் புனித தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
