தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் “மெஜாரிட்டி போர்” உச்சகட்டத்தை எட்டியுள்ளது! 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்தும், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் 113 என்ற பலத்தில் இருந்தும், அந்த “மேஜிக் நம்பரான” 118-ஐ எட்ட முடியாமல் தவெக தலைவர் விஜய் தவித்து வருகிறார்.
“ஆட்சி அமைக்கக் கூப்பிடுங்க” என ஆளுநரைச் சந்தித்து விஜய் கோரிக்கை வைத்தாலும், “118 பேரின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஒரு இஞ்ச் கூட நகர முடியாது” என ஆளுநர் அர்லேகர் திட்டவட்டமாக ‘நோ’ சொல்லிவிட்டதால், பந்து இப்போது விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பக்கம் திரும்பியுள்ளது. எஞ்சிய 6 இடங்களுக்காக விஜய் விடுத்த கோரிக்கைக்கு அவர்கள் இன்று எடுக்கப்போகும் முடிவுதான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
இன்னொரு பக்கம், “விஜய் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது” என்பதில் திமுகவும் அதிமுகவும் செம குறியாக இருந்து வருகின்றன. பரம எதிரிகளான இவ்விரு கட்சிகளும் ரகசியமாகத் கைகோர்த்து, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியலில் ஒரு மெகா பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
இன்று காலை 9 மணிக்கு பனையூரில் கூடவுள்ள தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் ‘கூண்டோடு ராஜினாமா’ என்கிற அதிரடி முடிவை விஜய் எடுப்பாரா? அல்லது கடைசி நிமிடத்தில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் கைகொடுப்பார்களா? என ஒட்டுமொத்த தமிழகமும் ‘திக் திக்’ நிமிடங்களில் உறைந்து போயுள்ளது.
