நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வட ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய 5 நார்டிக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பக் கூட்டாண்மை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஜனநாயக மதிப்புகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனிதநேய வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நாடுகளுடனான இந்தியாவின் நட்பு மேலும் வலுவடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த உச்சிமாநாட்டிற்கு இடையே ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் டென்மார்க் பிரதமர்களுடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிருடனான சந்திப்பில், பசுமை தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் பொருளாதாரம் (Blue Economy) குறித்து விவாதிக்கப்பட்டது. பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ உடனான பேச்சில் செயற்கை நுண்ணறிவு (AI), 5G, 6G நெட்வொர்க் மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதேபோல், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனுடன் இணைந்து இருநாடுகளின் பசுமை மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தப் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
மொத்தம் 1.9 டிரில்லியன் டாலர் உலகளாவிய பொருளாதார மதிப்பைக் கொண்ட இந்த 5 நாடுகளுடனான இந்தியாவின் கூட்டணி, வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 5 நாடுகளுக்கான ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே வந்துள்ள பிரதமர் மோடி, அடுத்ததாக இத்தாலி நாட்டுக்குச் செல்லவுள்ளார்.
