உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய தாயார் சாவித்திரி தேவியை நேரில் சந்தித்துள்ளார். வயது முதிர்வால் உடல் நலக்குறைவு காரணமாக சாவித்திரி தேவி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் தனது தாயாரை சந்திப்பதற்காக இன்று மருத்துவமனைக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத் தன்னுடைய தாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு தாயை அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். யோகி தன்னுடைய தாயை இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.