மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது சீனா ஆசியப் பகுதியில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, கிழக்கு சீனக் கடலில் சீனா ஒரே நேரத்தில் சுமார் 2,000 மீன்பிடிக் கப்பல்களைக் களமிறக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.
சுமார் 400 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் இந்தக் கப்பல்கள் மூலம், அந்த கடல் பகுதியை முழுமையாகத் துண்டிக்கும் பயிற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் கடல் வழிப்பாதையை முடக்கும் சீனாவின் ஒரு தந்திரமான போர் ஒத்திகையாகப் பார்க்கப்படுகிறது.
நேரடிப் போர் கப்பல்களைப் பயன்படுத்தாமல் மீன்பிடிக் கப்பல்களை சீனா பயன்படுத்துவதற்குப் பின்னால் ஒரு நுட்பமான காரணம் உள்ளது. போர்க் காலங்களில் எதிரி நாடுகளின் கடல் வழிப் போக்குவரத்தை ரகசியமாகவும் எளிதாகவும் தடுப்பதற்கு இத்தகைய கப்பல்கள் சிறந்த கருவியாகும்.
மேலும், தான் ஒரு பெரிய போருக்குத் தயாராகி வருவதை உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாகக் காட்டவும் சீனா இந்த உத்தியைக் கையாள்கிறது. ஏற்கனவே உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவித்து வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை ஆசியப் பகுதியில் மூன்றாவது உலகப் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது.
