நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில் அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோடை சீசன் மற்றும் 2-வது சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் சென்று இயற்கை அழகுகளை கண்டு ரசிப்பார்கள். இந்த ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போவதால் சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவதால் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை ஊட்டி- குன்னூர், ஊட்டி- மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கேத்தி இடையை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்தும் பயணிகள் செல்லலாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.