சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகாலை 3:30 மணிக்கே தொடங்கி நள்ளிரவு வரை நகரின் உயிர்நாடியாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததைக் கண்ட பயணி ஒருவர், அவரைத் தட்டி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், டிக்கெட் கொடுக்காமல் பயணியிடம் தகராறில் ஈடுபட்டதோடு, “விருப்பம் உள்ள இடத்தில் புகார் செய்துகொள்ளுங்கள்” என அலட்சியமாகப் பேசியுள்ளார்.இந்தச் சம்பவத்தை அந்தப் பயணி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது வைரலானது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பணி நேரத்தில் தூங்கிய அந்த ஊழியரை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
அதே சமயம், ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘ரயில் ஒன்’ செயலி குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், மக்கள் இன்னும் பழைய முறைகளையே நம்பி அவதிப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
