மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது தாக்குதல்களுக்காக சீனாவின் உளவு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய ராணுவத்தின் கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி ‘பினான்சியல் டைம்ஸ்’ (Financial Times) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது ஈரான், சீனாவின் ‘எர்த் ஐ’ (Earth Eye) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘TEE-01B’ ரக செயற்கைக்கோள்களின் சேவையைப் பெற்றுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களிலேயே, ஈரானிய விண்வெளிப் படையினர் அதன் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஈராக், கத்தார் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் துல்லியமாக உளவு பார்த்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீன செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் சதி இது. இதில் எவ்வித உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு சீனா ஆயுத உதவி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வரும் மே மாதம் அவர் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கு முன்னதாக, சீனா மீது 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரையும், மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சூழலையும் மேலும் சிக்கலாக்கியுள்ளது.
