மலேசியத் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த மலேசியத் தலைமையமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம் உடன் நவம்பர் 7ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டின் மார்ச் திங்கள், சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் குறித்து நாம் முக்கிய ஒத்தக் கருத்தை உருவாக்கினோம். கடந்த ஓராண்டில், இரு தரப்பும் பல்வேறு நிலையிலான நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன் தந்த ஒத்துழைப்புகளை உயர் தரமாக முன்னேற்றி, இரு மக்களுக்கு நன்மை புரிந்துள்ளன என்றார்.

இரு தரப்பும் உயர்நிலை நெடுநோக்கு கூட்டாளி உறவை வளர்த்து, அரசியல் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், வளர்ச்சி நெடுநோக்கு இணைப்பை வலுப்படுத்தி, பன்முக பரஸ்பர நலன் தந்த ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர்தரக் கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

மேலும், மலேசியாவுடன் உயர் நிலை கல்வி, பண்பாடு, சுற்றுலா, இளைஞர் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து, சீனாவும் மலேசியாவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பாதுகாப்புவாதத்தைக் கூட்டாக எதிர்த்து, சர்வதேச நேர்மை மற்றும் வளரும் நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

அன்வார் கூறுகையில், சீனாவுடன் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை ஆழமாக்கி, தகவல் தொழில் நுட்பம், எண்ணியல் பொருளாதாரம், எரியாற்றல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மலேசிய அரசு பாடுபடும் என்றார்.

You May Also Like

More From Author