குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்திற்கு இன்று வந்த திரெளபதி முர்மு, அங்கு தயாராக இருந்த ரஃபேல் போர் விமானத்தில் ஏறினார். அவருடன் சில விமானப் படை அதிகாரிகளும் இருந்தனர். தொடர்ந்து, சிறிது நேரத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் அந்த ரஃபேல் போர் விமானம் வானில் சீறிப்பாயந்தது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 8, 2023 அன்று, அசாம் மாநிலத்தின் தேஸ்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து, சுகோய் 30 எம்கேஐ (Sukhoi 30 MKI) போர் விமானத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பயணம் செய்திருக்கிறார். அப்போது, தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து சுமார் 30 நிமிடங்கள் வான்வழிப் பயணத்தை மேற்கொண்ட திரெளபதி முர்மு, இமயமலை, பிரம்மபுத்ரா நதி மற்றும் தேஸ்பூர் பள்ளத்தாக்கின் மீது பறந்தார்.
குடியரசுத் தலைவர் முர்முவுக்கு முன்னதாக, சுகோய் போர் விமானங்களில் பிரதிபா பாட்டீல், ஏபிஜே அப்துல் கலாம் போன்ற முன்னாள் குடியரசு தலைவர்கள் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்த பயணத்தின் மூலமாக ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.
முதலில், இந்த பயணம் அக்டோபர் 18 அன்று மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வேறு சில காரணங்களால் குடியரசுத் தலைவரின் பயணத்திட்டம் இன்றைய தினத்திற்கு மாற்றிவைக்கப்பட்டது.
