சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான டோ லாமுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஏப்ரல் 15ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் பேசுகையில், வியட்நாம் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதலில் சீனாவில் பயணம் மேற்கொள்வது, சீனா-வியட்நாம் உறவை வளர்ப்பதற்கு நீங்கள் அளிக்கும் பெரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும் அண்டை நாடுகளுடனான தூதாண்மையில் சீனா எப்போதும் வியட்நாமுக்கு முன்னுரிமை அளிக்கும். வியட்நாமுடன் இணைந்து ஆரம்பக் குறிக்கோளைக் கடைப்பிடித்து தொடர்ந்து நட்புறவை வளர்க்கவும், ஒத்துழைப்பு மேற்கொண்டு ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கவும், உயர்தரத்தில் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பை முன்னேற்றவும், உயர்நிலையில் உத்திப்பூர்வ சீனா-வியட்நாம் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதில் மேலும் பெரும் பங்காற்றவும் சீனா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.
இருதரப்பும் கட்சிகளுக்கிடையே சிறந்த தொடர்பு வழியைப் பயன்படுத்தி உயர்நிலை தொடர்புகளை அதிகரித்து ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். வளர்ச்சிக்கான உத்திநோக்கு திட்டங்களின் இணைப்பை விரைவுபடுத்தி, உள்கட்டமைப்புகளின் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒருதரப்புவாதத்தையும் பாதுகாப்புவாதத்தையும் கூட்டாக எதிர்த்து உலகளாவிய தாராள வர்த்தக அமைப்புமுறையையும் தொழில் மற்றும் விநியோக சங்கிலியின் நிலைத்தன்மையையும் பேணிக்காக்க வேண்டும். வளர்ச்சி, பாதுகாப்பு, நாகரிகம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான உலகளாவிய முன்னெடுப்புகளை கூட்டாக செயல்படுத்தி, உலகளாவிய சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டும். மேலும், நெருங்கிய சீனா-ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்தை மேம்படுத்த, சீனா பிரதேச நாடுகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டுக்கு ஆதரவளிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு மற்றும் மக்களுக்கு டோ லாம் நன்றி தெரிவித்ததோடு, சீனாவுடன் இணைந்து நட்புறவை பராமரித்து, இருநாடுகளின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவு மற்றும் உத்திநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொது சமூகத்தின் வளர்ச்சியை மேம்படுத்த வியட்நாம் விரும்புவதாகவும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கட்சி தொடர்பு, பொது பாதுகாப்பு, சட்ட நீதி, பொருளாதாரம், தொழில் சங்கிலி ஒத்துழைப்பு, சுங்கத்துறை ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், மக்களின் நலவாழ்வு, மனித வள வளர்ச்சி, ஊடகம் உள்ளிட்ட பல துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்களில் கையெழுத்திடும் விழாவில் அவர்கள் கூட்டாக கலந்து கொண்டனர்.
அதேநாள் நண்பகல் மக்கள் மாமண்டபத்தில் டோ லாம் தம்பதிக்கு, ஷிச்சின்பிங் மற்றும் பேங் லியுவான் வரவேற்பு விருந்து அளித்தனர்.
