மதுரை மாவட்டம் அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி. இவருக்கு 73 வயது ஆகிறது. இந்த மூதாட்டி பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயனின் மனம் கொத்திப் பறவை, விஜய் நடித்த வில்லு உள்ளிட்ட திரைப்படங்களும் அடங்கும். கடைசியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெருமாயி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இன்று மாரடைப்பு காரணமாக பெருமாயி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறப்பிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.