தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 22,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் – 322, கும்பகோணம் – 756, சேலம் – 486, கோவை – 344, மதுரை – 322, திருநெல்வேலி – 362 என மொத்தம் 3,274 பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் www.arasubus.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாளை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் இணையதளமான *www.arasubus.tn.gov.in*-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, விரைவில் நேர்காணலும் நியமனமும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.