சென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள 1,519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி, விதவிதமான விநாயககர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக பூஜை செய்து வந்த விநாயகர் சிலைகளை இன்று கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள 1,519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன.

பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது வண்ணாரப்பேட்டை மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த இடங்களில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து சிலைகளும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
